செய்திகள்

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது

சென்னை: ஜூலை 11/ 2025 

AAY, PHH ரேசன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு! ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ‘இந்த’ தேதியை மறக்காதீங்க

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளும், உணவுப் பொருள் விநியோகமும் ரேஷன் கார்டுகளின் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பொது விநியோக திட்ட பயனாளிகள் தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி சான்று, தொலைபேசி எண் பதிவு ஆகியவற்றை மேற்கொள்ள வருகின்ற சனிக்கிழமை (12.07.2025) அன்று பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது.

ஒரு பகுதியில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 9388 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கு மேல் குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிகளில் முழு நேரமாக 4,352 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் தமிழக முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன் பெருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொது விநியோக திட்ட பயனாளிகளுக்காக வரும் சனிக்கிழமை (12ஆம் தேதி) சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,”பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 12.07.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கொள்ளப்படுகிறார்கள். பிற மாவட்டங்களில் மண்டல, வட்ட வழங்கல் அதிகாரிகள் அளவில் இந்த குறைதீர் முகாம்கள் நடத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் முகாம்கள் மூலம், புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்கள் மூலம், புதிதாக திருமணமானவர்கள், புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் பெயர் நீக்கம், சேர்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் தற்போது மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button